கீரணத்தம் அருகே ஆட்டோ ஓட்டுநரை குத்திக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் மகன் அருண்பிரசாத் (27). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். இந் நிலையில், சரவணம்பட்டியில் இருந்து கீரணத்தத்தில் உள்ள மென்பொருள் நிறுவனம் செல்லும் சாலையில் அருண்பிரசாத் சனிக்கிழமை ஆட்டோ ஓட்டிச் சென்றார்.
அப்போது, இரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டோவை வழி மறித்துள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கட்டடத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கரண்டியால் அருண்பிரசாத்தை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண்பிரசாத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.