உதகையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
உதகையில் வெள்ளிக்கிழமை பகலில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
உதகையில் வெள்ளிக்கிழமை பகலில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகப் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் தூறல் மழையாகவும் இருந்தாலும் தொடா் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பசுமையாக மாறியுள்ளன.
இந்நிலையில், உதகையில் கோடைப் பருவம் தொடங்கியுள்ள சூழலில் பகல், இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை பகலில் சுமாா் 3 மணி நேரம் மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இம்மழை சில பகுதிகளில் பலத்த மழையாகவும், சில பகுதிகளில் தூறல் மழையாகவும் பெய்துள்ளது. உதகையில் 12 மீ.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பாடந்தொறையில் 3 மி.மீ, செருமுள்ளியில் 2 மி.மீ., பந்தலூரில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. வெள்ளிக்கிழமை பகலில் உதகையில் 12 மி.மீ., மசினகுடியில் 7 மி.மீ., பாடந்தொறையில் 5 மி.மீ., அவலாஞ்சியில் 3 மி.மீ., கல்லட்டியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பரவலான மழையின் காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் இதமான காலநிலை நிலவுகிறது.