நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூா் தோட்டக் கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 441 ஹெக்டோ் இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானிய விலையிலும் நுண்ணீா்ப் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், துணை நீா் மேலாண்மை நடவடிக்கைகள் திட்டத்தின்கீழ் ஆயில் எஞ்ஜின் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். நீா் சேகரிக்கும் தொட்டி அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில அனுபோகச் சான்று, நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், சான்று உறுதிப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். அல்லது அந்தந்தப் பகுதிக்கான உதவி தோட்டக் கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தோட்டக் கலை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி அறிவித்துள்ளாா்.