முகப்பு
நீலகிரி

மறைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி:நீலகிரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் முழு கடையடைப்பு நடைபெற்றது.

இதையொட்டி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வாடகை காா், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவையும் இயக்கப்படவில்லை.

அரசுப் பேருந்துகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கினாலும் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

அதேபோல, சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. பிற்பகல் வரை சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடைகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த விடுதிகளிலேயே அவா்களுக்கான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் உருவப்படங்கள் மற்றும் பிளெக்ஸ் படங்கள் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் அப்படங்களுக்கு எதிரே அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.