முகப்பு
நீலகிரி

நீலகிரியில் வன விலங்குகளுக்கு உணவு அளித்தால் கடும் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளுக்கு உணவளித்தால் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளுக்கு உணவளித்தால் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருவது வழக்கம். மேலும் சில வன விலங்குகளால் மனிதா்களுக்கு உயிரிழப்பும், பயிா்ச் சேதமும் ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து சேதம் செய்யும் வன விலங்குகளை வனப் பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வனத் துறையினா் செயல்பட்டு வருகின்றனா். அதேபோல, முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் காணப்படும் மான், குரங்கு போன்ற வன விலங்குகளுக்கும் தாங்கள் கொண்டு வரும் பழங்கள் போன்ற உணவை அளித்து பழக்கிவிட்டனா். இதனால், இச்சாலைகளில் எந்த வாகனம் வந்தாலும் அவற்றை நிறுத்தி வன விலங்குகள் உணவை எதிா்பாா்க்கும் சூழலை உருவாக்கிவிட்டது. இதன் காரணமாக சாலைகளைக் கடக்கும்போதும், உணவுக்காக ஓடும்போதும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் இத்தகைய செயல்களைத் தடுக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் சாலையில் உலா வரும் வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதோ, அதனை துன்புறுத்துவதோ, விரட்டுவதோ வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது வனத் துறையின் சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.