குன்னூா் அருகே முள்வேலியில் சிக்கிய சிறுத்தை பலி
குன்னூா் அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வியாழக்கிழமை உயிரிழந்தது.
குன்னூா் அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வியாழக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக வளா்ப்பு நாய், கால்நடைகளை சிறுத்தைகள் அடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட எல்லநள்ளி அருகே உள்ள ஜோதி நகா் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
Advertisement
சம்பவ இடத்துக்குச் சென்ற வன விலங்கு பாதுகாப்பு மீட்புக் குழுவினா் பாதுகாப்பு உடை அணிந்து சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். சுமாா் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சிறுத்தை உயிரிழந்தது. உயிரிழந்த சிறுத்தை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் குருசாமி தபேலா தெரிவித்தாா்.