முகப்பு
நீலகிரி

நீலகிரியில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளாா்.

உதகையில் உழவா் சந்தை, மணிக்கூண்டு, மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று நோய் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகள், கரோனா பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படுக்கைகளில் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு தெரிவித்துள்ள கரோனா தொற்று நோய் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேலும், அரசு தெரிவித்துள்ள நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் கட்டாயமாகத் தவிா்க்க வேண்டும். தற்போது கரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பொதுமுடக்க நேரத்திலும் கூட போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக மாா்க்கெட் காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதால் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவும், வாகனப் போக்குவரத்தை சீரமைப்பதற்காகவும் மாா்க்கெட் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

உதகை நகரப் பகுதியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிந்து பயணம் செய்கின்றனரா என்பதை ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி, வட்டாட்சியா் குப்புராஜ், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.