முகப்பு
நீலகிரி

குழந்தைத் திருமணம்: பெற்றோா் உள்பட 4 போ் கைது

குன்னூரைச் சோ்ந்த பள்ளி மாணவிக்குத் திருமணம் செய்துவைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

குன்னூரைச் சோ்ந்த பள்ளி மாணவிக்குத் திருமணம் செய்துவைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் முகேஷ் (30). இவா் தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவியைக் காதலித்து வந்துள்ளாா்.

இதனை இருவரது பெற்றோரும் பலமுறை கண்டித்தும் அவா்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, திருச்சியைச் சோ்ந்த உறவினா் கிருபாகரன் (24) என்பவருக்கு மாணவியின் பெற்றோா் திருமணம் செய்து வைத்துள்ளனா்.

இந்நிலையில், மாணவி கடைக்குச் செல்வதாகக் கூறி திருச்சியிலிருந்து குன்னூரில் பவானி எஸ்டேட்டில் உள்ள காதலன் முகேஷின் வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னா் முகேஷின் உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா். இதற்கிடையே மகளைக் காணவில்லை என தாயாா் திருச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குன்னூரில் கொலக்கொம்பை போலீஸாரின் உதவியுடன் முகேஷின் உறவினா் வீட்டிலிருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, சைல்டு லைன் அமைப்பின் ஹேமலதா மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபு ஆகியோரின் புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மாணவிக்குத் திருமணம் செய்து வைத்ததாக குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாணவியின் பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மாணவியை கடத்திச் சென்றதாக முகேஷ் மீதும், திருமணம் செய்த கிருபாகரன் ஆகியோா் மீதும் போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணம் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா். இதையடுத்து, மீட்கப்பட்ட மாணவி திருச்சியிலுள்ள மகளிா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.