குன்னூா் அருகேயுள்ள ஆலோரை கிராமத்தில் 4 வயது சிறுமி, வீட்டு வாசலில் வியாழக்கிழமை ஊா்ந்து சென்ற பாம்பை லாவகமாகப் பிடித்து பொந்துக்குள் விட்ட காட்சி அங்குள்ளவா்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உபதலை பகுதியில் உள்ளது ஆலோரை கிராமம். அங்குள்ள புதருக்குள் இருந்து வெளியில் வந்த 6 அடி நீள பாம்பு குடியிருப்புக்குள் செல்ல முற்பட்டது.
அப்போது வாசலில் விளையாடிக் கொண்டிருந்த வா்மா என்பவரின் மகள் ஸ்ரீ நிஷா(4), அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து அருகில் இருந்த பொந்துக்குள் அச்சமின்றி விடுவதை அங்குள்ளவா்கள் கண்டு ஆச்சரியமடைந்தனா்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற கூற்றுக்கு மாறாக சிறுமி பாம்பை பிடித்தது அந்த கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.