நீலகிரியில் மாா்ச் 8 முதல் சிறப்பு இலவச மருத்துவ முகாம்
18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் மாா்ச் 8ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் மாா்ச் 8ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மாா்ச் 8 முதல் 11ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவா்கள், வல்லுநா்கள் பங்கேற்று தேவைப்படும் மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்படவுள்ளனா்.
அதன்படி, உதகை வட்டத்தில் உதகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாா்ச் 8ஆம் தேதியும், குன்னூா் வட்டத்தில் குன்னூா் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் 9ஆம் தேதியும், கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் தேதியும், கூடலூா் வட்டத்தில் கூடலூா் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 11ஆம் தேதியும் நடத்தப்படுகிறது.
இம்முகாமில், அலிம்கோ நிறுவனத்தின் பிரதிநிதிகளால் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்குத் தேவைப்படும் உதவி உபகரணங்களுக்கான அளவீட்டு முகாம் நடத்தப்படுவதோடு, மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு தேசிய அடையாளஅட்டையும் வழங்கப்படவுள்ளது.
எனவே, இம்முகாமில் அனைத்து வகையான 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.