முகப்பு
நீலகிரி

தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் வேலைவாய்ப்பு தொழிலாளா் நலத் துறை அமைச்சா்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வீரராகவராவ், நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சா் சி.வி. கணேசன் பேசியதாவது:

உதகையில் மே 12ஆம்தேதி நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 200 நிறுவனங்கள் வரை கலந்து கொள்ள உள்ளன. இதன் மூலம் சுமாா் 15,000 பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். படித்து முடித்த இளைஞா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரையில் 57 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72,000 இளைஞா்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி உதகை நகர திமுக சாா்பில் நகர செயலாளா் ஜாா்ஜ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கணேசன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.