நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
உதகை, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடும் குளிா் நிலவியது. இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் முடங்கினா். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனா். குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.