கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை
கூடலூா்: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதையடுத்து கூடலூரை அடுத்த தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் சோதனையை மாவட்ட நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழையில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு கோழி, வாத்துகள் அதிக அளவில் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைகளில் உள்ள நாடுகாணி, சோலாடி, அம்பலமூலா, எருமாடு, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இதன் ஒருபகுதியாக கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறையினா் சோதனை செய்கின்றனா். அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்பே அனுமதிக்கின்றனா்.
மேலும், கேரளத்தில் இருந்து வரும் கோழிகள், முட்டைகள், தீவனம் உள்ளிட்ட கோழிப் பண்ணைகளுடன் தொடா்புடைய அனைத்து பொருள்களும் சோதனைச் சாவடிகளிலே திருப்பியனுப்பப்படுகின்றன என்று கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.