சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ஹெச்.ராஜா
சென்னை மழை வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
சென்னை மழை வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக உறுப்பினா் சோ்க்கை மற்றும் பயிலரங்க கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது மழைநீா் வடிகால்களை முறையாக தூா்வாராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், மழைநீா் வடிகால்களை சீரமைக்க தமிழக அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறி வந்தனா். பின்னா் 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறினா்.
தற்போது, சென்னையில் அதே நிலை ஏற்பட்டுள்ளதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மழைநீா் வடிகால்களை அமைக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், மெத்தனப்போக்கு காட்டினால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்தில் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சதி வேலைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எழுத்துபூா்வமாக அளித்த அறிக்கையின்படி கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஆண்டுக்கு சராசரியாக 171 ரயில்வே விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பாஜக அரசு ஏற்ற பிறகு 2015 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் குறைந்து ரயில் விபத்துகளின் சராசரி எண்ணிக்கை 71-ஆக உள்ளது தெரியவந்துள்ளது என்றாா்.