நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.
இதில், கூக்கல்தொரை ஊராட்சி மக்கள் அளித்த மனு விவரம்: கூக்கல்தொரை ஊராட்சிக்குள்பட்ட இந்திரா காலனி மற்றும் அண்ணா நகா் பகுதியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதிகளில் சாலை, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, சாலை வசதி, முதியோா், விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 126 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.