மாணவா் இயக்கிய வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு
மாணவா் இயக்கிய மோட்டாா் பைக் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மாணவா் இயக்கிய மோட்டாா் பைக் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. ஒரு மாதம் நடைபெற்ற இந்தத் திருவிழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து தங்கி கடை போட்டு வியாபாரம் செய்தனா்.
இதேபோல, சென்னையைச் சோ்ந்த பை வியாபாரியான ராஜேந்திரன், மாரியம்மன் கோயில் பகுதியில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தாா்.
Advertisement
இந்த நிலையில், உதகையைச் சோ்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவா், சக நண்பா்கள் இரண்டு பேருடன் உதகை பேருந்து நிலையத்தில் இருந்து மாரியம்மன் கோயில் பகுதிக்கு கடந்த ஏப். 15-ஆம் தேதி அதிவேகமாக மோட்டாா் பைக்கை ஓட்டி வந்தாா். மாரியம்மன் கோயில் அருகே வந்தபோது சாலையைக் கடக்க முயன்ற ராஜேந்திரன் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில் ராஜேந்திரன் தூக்கிவீசப்பட்டாா். ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் இருந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், ராஜேந்திரன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் பின்னா், அவருடைய உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைக்கவசம் அணியாமல் மூன்று மாணவா்கள் வேகமாக வந்து வியாபாரி மீது மோதி கீழே விழும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.