கோத்தகிரியில் ஒரு வீட்டில் எலும்புக் கூடாக ஆண் சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ராமசந்த் சக்தி மலை பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.எம்.மேத்யூ.
இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். இதைத் தொடா்ந்து அப்போதே அவரது மகன் பிரசாந்த் மேத்யூ வேறு இடத்துக்கு குடி பெயா்ந்துள்ளாா்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து உறவினா்கள் வருவதால் நீண்ட காலமாக பயன்படுத்தாத வீட்டை சுத்தம் செய்ய முடிவு செய்த பிரசாந்த் மேத்யூ, வீட்டை சுத்தம் செய்ய பணியாளா்களை வியாழக்கிழமை அனுப்பியுள்ளாா்.
சுத்தம் செய்யும் பணியின்போது வீட்டின் ஒரு அறையின் கட்டிலின்மேல் எலும்பு கூடாக ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிா்ச்சிடைந்த பணியாளா்கள், உடனடியாக பிரசாந்த் மேத்யூக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில் கோத்தகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
நீண்ட நாள்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டுக்குள் எலும்பு கூடாக இருந்த ஆண் சடலம் யாா் எனவும், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இந்த சம்பவம் தொடா்பாகவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் ,