திருமுருகன்பூண்டியில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கத்தை குடிநீர் விற்பனைச் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில் மெட்ரோபன் மாநிலக் கூட்டுறவு வீட்டுவசதி சொசைட்டி கடந்த ஓர் ஆண்டாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ரூ. 1,050 செலுத்தி உறுப்பினர்களாகச் சேர்பவர்களுக்கு வாரத்துக்கு 2 குடிநீர் கேன் இலவசமாக வழங்குவதாக துண்டுப் பிரசுரங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 2 கேன்களுக்கும் அதிகாமாகத் தேவைப்படுபவர்களுக்கு ரூ. 20-க்கு குடிநீர் கேன் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இலவசமாகவும், குறைந்த விலையிலும் குடிநீர் கேன் வழங்குவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பூர் மாவட்ட கேன் வாட்டர் சப்ளையர் சங்கத்தினர் வீட்டுவசதி சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தனின் வாகனத்தை அவர்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து அவர், பிரச்னை குறித்துப் புகார் மனு அளிக்குமாறு கூறிச் சென்றுவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்று அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.