திருப்பூரில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது: 127 பவுன் பறிமுதல்
திருப்பூரில் தொடர் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை மாநகர தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 127 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூரில் தொடர் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை மாநகர தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 127 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த மாநகரக் காவல் ஆணையர் பொ.நாகராஜன் உத்தரவிட்டிருந்தார். இதற்காக துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து) அ.கயல்விழி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் பகுதியில் கடந்த 2ஆண்டுகளாக சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கோவை, உக்கடம், அல்அமீன் காலனியை சேர்ந்த எஸ்.சபீல் (41) என்பவரைக் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இதேபோல், நகைப் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த ஜி.ஜெகதீஷ் (36), திருப்பூர், 15 வேலம்பாளையம், நேரு வீதியைச் சேர்ந்த டி.நவீன்குமார் (23), திருப்பூர், காங்கயம் சாலை, மணியக்காரம்பாளைம், வள்ளியம்மை நகரைச் சேர்ந்த ஏ.பாபு (எ) சைனா பாபு (45) ஆகியோரை வெவ்வேறு தேதிகளில் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் 7 வழக்குகள், அனுப்பர்பாளையத்தில் 5 வழக்குகள், தெற்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, 15-வேலம்பாளையத்தில் 5 வழக்குகள், ஊரக காவல் நிலையத்தில ஒரு வழக்கு, அவிநாசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 20 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தமாக 127 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களைக் கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாநகரக் காவல் ஆணையர் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.