காங்கயத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.ஹெச்.பி. அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கயம் வட்டாட்சியரிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் ராஜா அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட தாராபுரம் சாலையில் பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயிலுக்கு சொந்தமான 740/17 என்ற சர்வே எண்ணில், சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, அதில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதுகுறித்து ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் எம்.கண்ணதாசன், காங்கயம் நகராட்சி ஆணையருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கோட்டப் பொறியாளருக்கும் 13.09.2017 அன்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
எனவே, கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றித் தர வேண்டும். மேலும், கோவை சாலையில் உடையார் காலனி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வரும் ஜெபக் கூடத்தில் பிரார்த்தனை என்ற பெயரில் வாரத்தில் 3 நாள்கள் விடிய விடிய இசைக் கருவிகளையும், ஒலிபெருக்கிகளையும் வைத்து சப்தம் எழுப்புவதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக மேற்கண்ட பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.