கிணற்றில் விழுந்த இருவர் மீட்பு; செல்போன் பேசியதால் விபரீதம்
உடுமலையில் கிணற்றில் விழுந்த இரு இளைஞர்கள் காயங்களுடன் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.
உடுமலையில் கிணற்றில் விழுந்த இரு இளைஞர்கள் காயங்களுடன் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் உள்ள நெல்லுக்கடை வீதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் பார்த்தசாரதி (21). வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றின் மேல் செவ்வாய்க்கிழமை இரவு உட்கார்ந்து கொண்டு செல்லிடப்பேசியில் (செல்போன்) பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். 30 அடி ஆழமுள்ள கிணற்றில் 10 அடி அளவுக்கு தண்ணீர் இருந்துள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த பார்த்தசாரதி எழுப்பிய சப்தத்தைக் கேட்ட இவரது சகோதரர் கார்த்தி (27) தம்பியைக் காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால், இருவரும் கிணற்றில் இருந்து மேலே வர முடியாமல் சப்தம் எழுப்பியுள்ளனர்.
சப்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை தலைமை அலுவலர் நாகராஜ் தலைமையில் அலுவலர்கள் கயிறு கட்டி சகோதரர்களை காயங்களுடன் மீட்டனர்.
பின்னர், இருவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.