உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் வன விலங்கு கணக்கெடுப்புப் பணி துவக்கம்
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் கோடைக் காலம் மற்றும் குளிர் காலத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுவது
வழக்கம். இதன்படி இந்த இரு வனச் சரகங்களில் மே 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.
இதற்காக உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு ஒரு வன ஊழியர், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர், ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு இந்தப் பணிகளை கவனிப்பர்.
ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பணிகள் நடைபெற உள்ளன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையொட்டி கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை வனச் சரகர் நவீன், அமராவதி வனச் சரகர் முருகேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.