மாநில கேரம் போட்டிக்கு நவம்பர்18இல் வீரர்கள் தேர்வு
மதுரையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கேரம் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் ஜூனியர் பிரிவு வீரர்கள், வீராங்கனைகளைத்
மதுரையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கேரம் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் ஜூனியர் பிரிவு வீரர்கள், வீராங்கனைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத்தினர் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
மாநில அளவிலான 40ஆவது ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 18ஆம் தேதி, திருப்பூர் பல்லடம் சாலை, காட்டுவளவு பகுதியில் உள்ள திருப்பூர் மாவட்ட கேரம் சங்க அலுவலகத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தகுதித் தேர்வு நடைபெறும்.
இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளில் தகுதி உடையோர் மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து மாநிலப் போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்.
நேர்முகத் தேர்வுக்கு வருவோர் 26.11.2000 தேதிக்குப் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் பங்கேற்பது அவசியம்.
இது தொடர்பான முன்பதிவு, கூடுதல் விபரங்களுக்கு எஸ்.கன்னியப்பனை (91714 59091, 97919 06942) தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் மாவட்ட கேரம் வீரர், வீராங்கனைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட கேரம் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.