வெள்ளக்கோவில் பகுதியில் கடும் குளிருடன் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது.
தற்போது உருவாகியுள்ள கஜா புயல் காரணமாக வெள்ளக்கோவில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வியாழக்கிழமை இரவு முழுவதும் மழைக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
காலை 5 மணிக்குத் தொடங்கிய சாரல் மழை மதியம் 3 மணி வரை தொடர்ந்தது. கடும் குளிரும் வீசியது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் மட்டும் செயல்பட்டன.
அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க வராமல் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. கடைகளில் வியாபாரம் குறைந்ததுடன், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.