முகப்பு
திருப்பூர்

மாயவப் பெருமாள் கோயிலுக்கு புகுந்த வீட்டுச் சீர் கொண்டு வந்து பெண்கள் வழிபாடு

குண்டடம் அருகே புது ஐயப்பநாயக்கன்பாளையம் ராஜீவ் நகரில் உள்ள மாயவப் பெருமாள் கோயிலுக்கு

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:00 AM
பகிர்:

குண்டடம் அருகே புது ஐயப்பநாயக்கன்பாளையம் ராஜீவ் நகரில் உள்ள மாயவப் பெருமாள் கோயிலுக்கு, திருமணமாகி வெளியூர்களில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் புகுந்த வீட்டுச் சீர் கொண்டு வந்து ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
 மாயவப் பெருமாள் கோயிலில் பந்த சேவை, பொங்கல் விழா கடந்த வாரம் சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஊரோரத்தில் உள்ள குளக்கரையில் உற்சவருக்கு நீராட்டும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அதனையடுத்து பெண்கள் குளக்கரையிலிருந்து கோயில் வரை கைகோத்து வந்து வழிபாடுகள் செய்தனர்.
   பின்னர், இந்த ஊரிலிருந்து திருமணம் ஆகி வெளியூர்களில் வசிக்கும் பெண்கள் குளக்கரையில் திரண்டு, அங்கிருந்து
சுவாமிக்கு கூடையில் புகுந்த வீட்டுச் சீர் சுமந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு வந்தனர். சீர்வரிசைப் பொருள்களை சுவாமிக்கு படைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
  தொடர்ந்து மாலையில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் புதுஐயப்பநாயக்கன்பாளையம், ராஜீவ் நகர், பூளவாடி, காணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.