வெள்ளக்கோவிலில் கிணற்றில் விழுந்த நாய் தீயணைப்புத் துறையினரால் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவிலை அடுத்த கச்சேரிவலசு பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.வீரப்பன் (55). இவருக்குச் சொந்தமான தோட்டம், கரூர் சாலை, காவல் நிலையத்தின் பின்புறம் உள்ளது. இந்தத் தோட்டத்தின் கிணற்றுக்குள் நாய் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிணற்றில் படிகள் இல்லாததால் அருகில் இருந்தவர்களால் நாயை உடனடியாகக் காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து, வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கயிறு கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி நாயை உயிருடன் மீட்டனர்.