தாராபுரம், உடுமலை பகுதிகளில் வெறி நாய்கள் கடித்ததில் 20 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர். ஆடு, மாடுகளும் உயிரிழந்தன.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள வேலப்பநாயக்கனூர் கிராமத்தில் வெறி நாய் ஒன்று வெள்ளிக்கிழமை திடீரென சாலையில் சென்றவர்களை துரத்தி கடித்தது. இதனால் பொதுமக்கள் அங்கு இங்கும் ஓடினர். நாய் கடித்ததில் குப்புசாமி, பிரவீன், ஆறுமுகம், மாரிமுத்து உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த சிலர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலர் உடுமலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலப்பநாயக்கனூரில் அதிக அளவு வெறி நாய்கள் சுற்றி வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரத்தில்: தாராபுரம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி (50). இவர் எருமை மாடுகள், ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வயலில் கடந்த வியாழக்கிழமை இரவு கூட்டமாகப் புகுந்த வெறிநாய்கள் அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த 5 எருமைக் கன்றுகளைக் கடித்துக் குதறின. இதில், 2 எருமைக் கன்றுகள் சம்பவ இடத்திலேய உயிரிழந்தன. அதே போல ஆடு, மாடுகள் சிலவற்றையும் நாய்கள் கடித்ததில் அவை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
எருமை மாடுகளையும், ஆடுகளையும் வேட்டையாடும் வெறி நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த எருமைக் கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இப்பகுதியில் கேட்பாரற்று திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.