திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள புஷ்பா ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேனுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருப்பூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் ரயில் நிலையத்தில் இருந்து புஷ்பா ரவுண்டானா வரையில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை நான்கு வழிச் சாலையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சாலையின் நடுவில் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் புஷ்பா பேருந்து நிறுத்தம் முதல் பங்களா பேருந்து நிறுத்தம் வரையில் மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் 5 மின் கம்பங்கள் சாலையின் மையத்தில் தனித்து உள்ளன. இவ்விடத்தில் கோவை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் காலை, மாலை வேளைகளில் சாலைகளின் நடுவில் நிறுத்தப்படுகிறது. இதனால் பேருந்துக்காக நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், பாதசாரிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.