சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் நிறைவு
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதன் பின்னர், பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக் கட்டளை தினசரி நடைபெற்றது.
தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், மாலை 5 மணியளவில் தெற்கு ரத வீதியில் தேர் நிலைநிறுத்தப்பட்டது.
பின்னர் 2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு, கிரிவலப் பாதையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்த் திருவிழாவின் 3ஆம் நாளான புதன்கிழமை மாலை 6 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வழிபட்டனர். இந்தத் தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் எஸ்.வி.ஹர்ஷினி (திருப்பூர்), எம்.கண்ணதாசன் (சிவன்மலை) ஆகியோரின் சார்பில் கோயில் ஊழியர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
தேரோட்டம் நடைபெற்ற 3 நாள்களும் அன்ன தானம், பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தேர்த் திருவிழா வரும் 30ஆம் தேதி நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் காங்கயம் கிளை சார்பில் சிறப்புப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டன. காங்கயம் மற்றும் திருப்பூர் மாவட்டக் காவல் துறை
சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.