பேருந்தில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு
திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், பெருந்தொழுவு சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் அய்யனார் ரெட்டி (61), இவரது மனைவி ஜெயக்கொடி (58). ராக்கியாபாளையம் பிரிவு, காளியப்பா நகரில் தேநீர்க் கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயக்கொடி சிவன்மலை கோயிலுக்குச் செல்ல ராக்கியாபாளையம் பிரிவுக்குப் புதன்கிழமை வந்துள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.
இதையடுத்து, பேருந்து சென்று கொண்டிருந்தபோது பயணச்சீட்டு வாங்குவதற்காக பணம் எடுத்துள்ளார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் ஊரக காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.