ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாவட்டத் தலைநகர், ஒன்றியத் தலைநகரங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல கோயில்களின் நிலங்கள் தனியார் வசம் உள்ளன. கோயில் நிலங்களை மீட்டு கோயில்களுக்கே திரும்பக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
மாநில அமைப்பாளர் க.பக்தன், மாநிலச் செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு ஜி.வெங்கடேஷ்வரன், இணை அமைப்பாளர் ச.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், ஆண்கள் விநாயகர், முருகன் உள்ளிட்ட
கடவுள் வேடமிடும் வந்தனர். 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.