பட்டியலினத்தோருக்கான விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டம் சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் வீ.சே.கலிவரதன் தலைமை வகித்தார். அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சாந்திலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், உதவி ஆய்வாளர் ஷாஜகான், கிராம நிர்வாக அலுவலர் குமார், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பவுல் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பட்டியலினத்தவர்களுக்கு தனிநபர் கழிப்பிட வசதி, தனி மயானம், இடுகாடு ஆகியவற்றுக்கு கூரை வசதி, சாலை, தெருவிளக்கு, குடிநீர், சாக்கடைகால்வாய் , பள்ளிக் கூடம், அங்கன்வாடி நியாயவிலைக் கடை , சமூக நலக்கூடம், பொதுக்கழிப்பிடம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் கோயில் திருவிழா போன்ற நிகழ்வுகளில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா, பட்டியலினத்தவர், பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசால் வழங்கப்படக் கூடிய சலுகைகள் உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள், சேவூர் வடக்கு வீதி மயானத்துக்கு உரிய சாலை வசதி இல்லாததால், பள்ளத்துக்குள் உடலை சுமந்து செல்கிறோம். அதிலும் மழைக் காலங்களில்
தண்ணீர் தேங்குவதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். சேவூர் அரசுமேல்நிலைப் பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியையொட்டி உள்ள நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. ஆகவே பள்ளி மாணவ, மாணவியர் நலன் கருதி பள்ளிப் பகுதி அருகே வேகத்தடை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.