பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்காக முதல் முறையாக தேர்வு மைய நுழைவுச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கல்வி மாவட்டம் சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 177 மாணவர்களும், 156 மாணவிகளும் என மொத்தம் 333 பேர் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் பொதுத்தேர்வு மைய நுழைவுச் சீட்டைபோல, காலாண்டுத் தேர்வுக்கு முதல் முதலாக தேர்வை மைய நுழைவுச் சீட்டை தனது சொந்த செலவில் தயார் செய்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் ம.பழனிசாமி வழங்கினார்.
நுழைவு சீட்டை எவ்வாறு எழுத வேண்டும். அதன் பயன்பாடு என்ன என்பது குறித்து விளக்கமளித்தார். மேலும், நுழைவுச் சீட்டின் மூலம் மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாக நிறைவு செய்துள்ளனரா என அனைத்துப் பாட ஆசிரியர்களும் சரி பார்த்து கையெப்பம் போட வேண்டும்.
இதனை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் சரி பார்த்து உதவி தலைமை ஆசிரியர் ம.துரைசாமி, இறுதியாக பள்ளித் தலைமை ஆசிரியர் ம.பழனிசாமி ஆகியோருக்கு அனுப்பி அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுத முடியும்.
இதன் மூலம் அனைத்து மாணவ, மாணவிகளும் பாடங்களை முடித்து நிறைவு செய்த பின்னர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறவும், அனைத்து மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கண்காணிக்கும் வகையில் புதிய நுழைவுச் சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ம.பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார். மேலும் தேர்வு மைய அறை, தேர்வு எண் போன்ற விவரங்களை தகவல் பலகையில் ஒட்டி வைத்து இப்போது இருந்தே அரசு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.