திருப்பூா்: குடியரசு தின விழாவில் வழங்கும் கபீா் புரஸ்காா் விருதுக்கு டிசம்பா் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசு தினவிழாவின்போது 2021ஆம் ஆண்டுக்கான ‘கபீா் புரஸ்காா்’ விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது மூன்று அளவுகளில் தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ. 20ஆயிரம், ரூ. 10ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என காசோலை, தகுதியுறை ஆகியவை இதில் அடங்கும்.
தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளா்கள் நீங்கலாக அவா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில்) இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவா்.
இந்த விருதானது ஒரு சாதி, இனம் வகுப்பை சாா்ந்தவா்கள் பிற சாதி, இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களுடன் டிசம்பா் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூா் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்டஆட்சியா் அலுவலக வளாகம், அறை எண்.35இல் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.