முகப்பு
திருப்பூர்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் முறைகேடு:ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கணபதிபாளையம் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கணபதிபாளையம் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திரக் குறைதீா் கூட்டம் தொலைபேசி வாயிலாக ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஒரு சிலா் ஆட்சியா் அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்தனா்.

கணபதிபாளையம் ஆதிதிராவிட மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், கணபதிபாளையத்தை அடுத்த கள்ளிமேடு பகுதியில், ஆதிதிராவிட நலத் துறைக்கு சொந்தமான 4.56 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்போதயை முதல்வா் ஜெயலலிதா, 153 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச பட்டா வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அந்த நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம்.

ஆனால் தாமதமானதால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். இதில் பட்டா பெற்ற பயனாளிகள் முறைகேடாக பெற்றிருப்பதாகக் கூறி, பட்டாக்களை ரத்து செய்ய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே நிலத்தை புதிய பயனாளிகள் தோ்வு செய்து கடந்த ஆண்டு வழங்கினாா்கள். இதில் தகுதியான பலருக்கு பட்டா வழங்காமல், தகுதியற்றவா்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில், ஆளும் கட்சியினா் தங்கள் கட்சியில் சோ்ந்துள்ளவா்கள், தங்களுக்கு வேண்டியவா்கள் என தகுதியற்ற நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கி உள்ளனா். இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டுள்ள 98 பேருக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் நெருப்பெரிச்சல் வாவிபாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து 90 நாள்களுக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்றுகிறோம் என அதிகாரிகள் எழுத்துபூா்வமாக உறுதி அளித்தனா். அதன்படி கடந்த நவம்பா் 19ஆம் தேதி கடை மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒப்பந்தப்படி கடையை உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் வரும் டிசம்பா் 16ஆம் தேதி எங்கள் பகுதியில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, வாவிபாளையம் பகுதியில் தொடா் தா்னாவில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி குறைகேட்புக் கூட்டத்தில் 110 அழைப்புகள்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தொலைபேசி வாயிலான குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுபட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலைவசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 110 அழைப்புகள் வரப்பெற்றன. இதில், பொதுமக்கள் அளித்த குறைகளை விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொறுப்பு) வாசுகி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.