தாராபுரம் அருகே உயர்மின் கோபுரதிட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டம்
தாராபுரம் அருகே உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம்,குண்டடம், மூலனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பவர்கிரீட் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும், கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கியதைப் போல சந்தை மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தராபுரத்தை அடுத்த மாம்பாடி ஊராட்சி தொட்டிய பாளையம் கிராமத்தில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் சட்டைகளைக் கழற்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் வாழ்வாதரத்தை இழந்துள்ளோம்.
இந்த நிலையில் பவர்கிரீட் நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையும் போதுமானதாக இல்லை. ஆகவே, கோவை மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைப் போல் வெளிச்சந்தை மதிப்பீட்டில் இழப்பீட்டை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி நூதன போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.