திருப்பூர்: தாராபுரத்தைச் சேர்ந்த வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியுடன் திருப்பூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்ட தாராபுரத்தைச் சேர்ந்தவர் தங்கமுத்து (63), இவரது மனைவி ராதாமணி (58), தங்கமுத்துவுக்கு தாராபுரத்தில் சொந்தமாக 2 லாட்ஜும், வணிக வளாகங்களும் உள்ளன. இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே இவர்களது கார் நின்றுள்ளது. இதன் பிறகு சிறிது தொலைவில் உள்ள ரயில்வே தண்டவளாதத்தில் இருவரது சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி திருப்பூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதன்பிறகு இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதன் பிறகு நடத்திய விசாரணையில், கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், அவர்களது தற்கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.