தாராபுரம் அருகே மதுபானக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.1.43 லட்சம் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1.43 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1.43 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கவுண்டன்வலசு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சின்னதுரை என்பவர் சூப்பர்வைசராகவும், ஈஸ்வரன், சுரேஷ்பாபு ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்த மூவரும் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது வாங்குவது போல் வந்த 2 பேர் அவர்களை கண்காணித்துள்ளனர். இதன் பிறகு திங்கள்கிழமை இரவு 9,30 மணி அளவில் கடையைப் பூட்டி விட்டு கடை விற்பனையாளர்கள் புறப்பட்டனர்.
அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியைக் காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரையும் மிரட்டியுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து ஊழியர்களின் கண்களில் தூவி விட்டு ரூ.1.43 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மூலனூர் காவல் துறையினர் டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராம் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.