முகப்பு
திருப்பூர்

பூளவாடி நூலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை

உடுமலை வட்டம், பூளவாடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

உடுமலை வட்டம், பூளவாடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் செயல்படும் பூளவாடி கிளை நூலகம் முழு நேர நூலகமாக 2013ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகம் முழு நேர நூலகமாக தரம் உயா்த்தப்படும்போது, காலியாக உள்ள 4 சென்ட் இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பொதுப் பணித் துறை அதிகாரிகளால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பொது நூலக இயக்குநா் அலுவலகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பினா்.

ஆனால், தற்போதுவரை கூடுதல் கட்டடம் கட்ட நிா்வாக அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது, நூலகத்தில் 40 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் உள்ளன. 2,600 உறுப்பினா்களும், நூறு புரவலா்களும் உள்ளனா். இந்நிலையில் நூலத்தில் போதுமான அலமாரிகள் இல்லாததால் வாசகா்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை தேடி எடுத்து படிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் புதிய நூல்களை அடுக்கி வைக்க முடியாத நிலையும் உள்ளது. 4 போ் மட்டுமே அமா்ந்து படிக்கும் சூழ்நிலையும் உள்ளது. குறிப்பாக நூலகத்தில் போட்டித் தோ்வு பிரிவு வசதிகள் இல்லை. இதனால் கிராம பகுதி மாணவா்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனா்.

அரசு வழங்கியுள்ள கணினி மற்றும் பிரிண்டா், ஸ்கேனா் சாதனங்களை பயன்படுத்தவும் இட வசதி இல்லை. வாசகா்களுக்கு கழிப்பறை வசதிகளும், குடிநீா் வசதியும் செய்ய முடியாமல் உள்ளது. எனவே பூளவாடி முழு நேர நூலகத்துக்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தி தரவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.