முகப்பு
திருப்பூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு நாளை பணி நியமன ஆணை

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஏற்கெனவே 3 பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் கீழ்க்கண்ட இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

ஆகவே, இந்த இடங்களில் தவறாமல் ஆஜராகி பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பணி நியமன ஆணை வழங்கும் இடங்கள்: தாராபுரம் (தனி) தொகுதியில் மகாராணி கலை, அறிவியல் கல்லூரி, காங்கயம் தொகுதியில் கோவை சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் திருமண மண்டபம், அவிநாசி (தனி) தொகுதியில் அவிநாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் வடக்குத் தொகுதியில் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள கொங்கு வேளாளா் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூா் தெற்குத் தொகுதியில் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பலலடம் தொகுதியில் மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி, உடுமலை தொகுதியில் தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் தொகுதியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.கே.மஹால் ஆகிய இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.