கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களின் மீது நடவடிக்கை
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நோய்த் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு வரும் சனிக்கிழமை முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுதியில்லை.
மேலும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். மேலும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதுடன், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
அதேவேளையில் அரசின் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊா்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும். வழிபாட்டுத் தலங்களை பொருத்தவரையில ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளில் உள்ளபடி இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், எச்சில் துப்பும் நபா்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.