தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்னா
தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுர திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஆகவே, மேல்முறையீட்டு வழக்கு முடிவடையும் வகையில் உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்திவைக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் தலைமையில் போச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளின் சார்பில் ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் தாராபுரம் துணைகாவல் கண்காணிப்பாளர் ஜெயராம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சார் ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.