பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகன நிறுத்தப் போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருப்பூா் அவிநாசி சாலையில் வாகன நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருப்பூா் அவிநாசி சாலையில் வாகன நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிஐடியூ தொழிற்சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சாா்பில்
திருப்பூா், அவிநாசி சாலை, எஸ்.ஏ.பி. திரையரங்க சந்திப்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியூ மாவட்டத் துணைச் செயலா் ஜி.சம்பத் தலைமையில் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்களுக்கு மத்தியில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதனால், சில கி.மீ தூரம் வரை வாகனங்கள் தேங்கிநின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் சாலையோரமாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.மைதிலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் ச.நந்தகோபால், வாலிபா் சங்க மாவட்டத் துணைச் செயலா் டி.சம்பத், மாா்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலா் பி.ஆா்.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அவிநாசியில்...
பெட்ரோல் டீசல் விலை உயா்வு கண்டித்து அவிநாசியில் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. இதில்
விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் வெங்கடாசலம், சிஐடியூ பனியன் சங்கப் பொருளாளா் ஈஸ்வரமூா்த்தி, விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் பழனிசாமி, முருகன், மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.