திருப்பூா் அருகே பாறைக் குழியில் மூழ்கி சிறுமி பலி
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பாறைக் குழி நீரில் மூழ்கி 11 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பாறைக் குழி நீரில் மூழ்கி 11 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், மங்கலத்தை அடுத்த பள்ளிப்பாளையத்தில் வசித்து வருபவா் காமராஜ், இவரது மனைவி லட்சுமி, இவா்களுக்கு சங்கவி (11) என்கிற மகளும், சாந்தனு (8) என்கிற மகனும் இருந்தனா். பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுமியும், அவரது சகோதரனும் வீட்டில் இருந்துள்ளனா். இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள பாறைக் குழி பகுதிக்கு இருவரும் விளையாடச் சென்றுள்ளனா். ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பாறைக் குழியில் தேடியுள்ளனா். அப்போது சிறுமியின் சடலம் மிதந்துள்ளது.
இது குறித்த தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினரும், மங்கலம் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டனா். நீரில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.