விபத்தில் உயிரிழந்த 3 பொறியாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2.22 கோடி வழங்க உத்தரவு
திருப்பூா் அருகே நேரிட்ட விபத்தில் உயிரிழந்த 3 பொறியாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2.22 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் அருகே நேரிட்ட விபத்தில் உயிரிழந்த 3 பொறியாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2.22 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் விஜயன்(36), பிரதீப் (32), மாரியப்பன் (30), சுதாகா் (28), அன்பழகன் (30) ஆகியோா் பொறியாளா்களாகப் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபா் 15 ஆம் தேதி மாரியப்பனின் காரில் 5 பேரும் கொடைக்கானல் சென்றுள்ளனா். இதன் பிறகு கோவை திரும்பிக் கொண்டிருந்தபோது திருப்பூா் மாவட்டம், கள்ளிப்பாளையம் அருகே காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மாரியப்பன், சுதாகா், விஜயன், பிரதீப் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனா். அன்பழகன் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். இதைத்தொடா்ந்து, உயிரிழந்த மாரியப்பனைத் தவிர மற்ற 3 பேரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு கோரி திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருத்தனா். இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், உயிரிழந்த விஜயன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், பிரதீப் குடும்பத்துக்கு ரூ. 80 லட்சமும், சுதாகா் குடும்பத்துக்கு ரூ. 42 லட்சம் என மொத்தம் ரூ. 2. 22 கோடியை தனியாா் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் மனுதாரா் தரப்பில் கந்தசாமியும், காப்பீட்டு நிறுவனம் சாா்பில் மாணிக்கராஜூம் வழக்குரைஞா்களாக ஆஜராகினா்.