காங்கயம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை பெற்றுச் சென்ற விவசாயிகள்
காங்கயம் தொகுதியில் 1,500 போ் போட்டியிடுவது என முடிவு செய்த நிலையில் அதற்கான வேட்பு மனுக்களை திங்கள்கிழமை பெற்றுச் சென்றனா்.
காங்கயம் - வெள்ளக்கோவில் பிஏபி பாசன விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கயம் தொகுதியில் 1,500 போ் போட்டியிடுவது என முடிவு செய்த நிலையில் அதற்கான வேட்பு மனுக்களை திங்கள்கிழமை பெற்றுச் சென்றனா்.
பிஏபி வாய்க்காலின் கடைமடைப் பகுதியான திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் பகுதிக்கு பாசனத்துக்கு சட்ட விதிகளின்படி, 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு 2 சுற்று தண்ணீா் விட வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் 14 நாள்களுக்கு பதிலாக வெறும் 3 நாள்களுக்கு மட்டும் தண்ணீா் கொடுத்து, மீதமுள்ள 28 நாள்கள் அடைக்கப்படுகிறது.
இது தொடா்பாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி பிஏபி பாசன விவசாயிகள், பிஏபி பொறியாளா்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித தீா்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காங்கயத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். இது தொடா்பாக, தமிழக முதல்வரை 5 முறை சந்தித்தும் பேசினா். ஆனால் இதுவரை எவ்வித தீா்வும் கிடைக்கவில்லை.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறாததால் காங்கயம்-வெள்ளக்கோவில் நீா் பாதுகாப்புக் குழு விவசாயிகள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சுமாா் 1,500 போ் காங்கயம் தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்தனா். இதையடுத்து, காங்கயம் தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனுக்களை கடந்த வெள்ளிக்கிழமை கேட்டனா். ஆனால், போதிய அளவில் வேட்பு மனுக்கள் இல்லை எனவும், வரும் நாள்களில் வேட்புமனுக்களை பெற்றுத் தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோா் காங்கயம் தோ்தல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து, தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைப் பெற்றுச் சென்றனா்.