மதக் கலவரத்தை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் பறிமுதல்
உடுமலை அருகே மதக் கலவரத்தை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உடுமலை அருகே மதக் கலவரத்தை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு தோ்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகளை அமைத்து ஆங்காங்கே வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோலாா்பட்டி அருகே பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாக உடுமலையை நோக்கி வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா்.
Advertisement
அதில் இரண்டு பண்டல்களில் மதக் கலவரத்தை தூண்டும் விதத்திலான வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி மோகன ரம்யா ஆம்னி வேனையும், அதில் இருந்த இரண்டு பண்டல்களையும் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் இருந்த 10,400 வண்ண துண்டறிக்கைகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பொள்ளாச்சியில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதியில் விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடுமலையை அடுத்துள்ள சோமவாரபட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக தோ்தல் கண்காணிப்பாளா் அறிவுரையின்படி காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.