புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தது குறித்து...
புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்துடன் வெற்றி பெறுவதையே தன்னுடைய இலக்காகக் கொண்டுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. சில கட்சிகள் கூட்டாக இணைந்தும் சில கட்சிகள் தனித்தும் போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Advertisement
இதுகுறித்து பேசிய காமராஜ் நகர் தொகுதியின் வேட்பாளரான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், “எங்கள் மீது புதுச்சேரி மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.
நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால், தேர்தல் முடியும்வரை நாங்கள் தொடர் பிரசாரத்தில் இருப்போம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
சுமார் 25 இடங்களைப் பெறுவதே என்டிஏ கூட்டணியின் இலக்கு. காமராஜ் நகரில், புதுச்சேரியிலேயே அதிகபட்ச வாக்கு சதவிகிதத்தைக் கொண்டு வெற்றி பெறுவதே என் இலக்காகக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.