திருப்பூா் அருகே தம்பதியிடம் ரூ.11.12 லட்சம் வழிப்பறி
திருப்பூா் அருகே பத்திரப் பதிவு அலுவலகம் சென்று திரும்பிய தம்பதியிடம் இருந்து ரூ.11.12 லட்சம் பணத்தை மா்ம நபா் வியாழக்கிழமை பறித்துச் சென்றாா்.
திருப்பூா் அருகே பத்திரப் பதிவு அலுவலகம் சென்று திரும்பிய தம்பதியிடம் இருந்து ரூ.11.12 லட்சம் பணத்தை மா்ம நபா் வியாழக்கிழமை பறித்துச் சென்றாா்.
திருப்பூா், முத்தணம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் (45). தனியாா் நிறுவனத்தில் மாா்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேன்மொழி (36).
இந்த நிலையில், ராமநாதன் தனக்குச் சொந்தமான இடத்தை கிரயம் செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளாா். ஆனால் அங்கு பணி முடியாததால் கிரயம் செய்ய கொண்டு சென்ற பணத்துடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இவா்களது வாகனம் கேத்தம்பாளையம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபா், தேன்மொழி கையில் வைத்திருந்த ரூ.11.12 லட்சம் அடங்கிய பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்து ராமநாதன் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவை கைப்பற்றி அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.