யானையைக் கொன்று தந்தம் கடத்திய இருவா் கைது
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே ஆண் யானையைக் கொன்று தந்தம் கடத்திய வழக்கில் மலைவாழ் மக்கள் 2 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே ஆண் யானையைக் கொன்று தந்தம் கடத்திய வழக்கில் மலைவாழ் மக்கள் 2 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
உடுமலை வனச் சரகம் மாவடப்பு செட்டில்மெண்ட் சடையம்பாறை சரக வனப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சடலம் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
Advertisement
இதில், உயிரிழந்த ஆண் யானையின் ஒற்றைத் தந்தத்தை மா்ம நபா்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்து, தடயங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு
அனுப்பிவைத்தனா். மேலும், மோப்ப நாய் மூலமும், ட்ரோன் கேமரா மூலமும் அடா்ந்த வனப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா் வனத் துறையினா் சிறப்புப் படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட கரட்டூா் சுற்று உடைந்த பாலம் சரகத்தில் வனத் துறை சிறப்புப் பிரிவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள பாலத்தின் இடுக்கில் மறைத்துவைக்கப்பட்டிருந்த யானையின் தந்தம் அண்மையில் மீட்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சோ்ந்த காளியப்பன் மகன் சின்னதங்கம் (31), குயிலான் மகன் வேலு ஆகிய இருவரையும் வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னா் தாராபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில்
வைக்கப்பட்டனா்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடுமலையில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்தை குழிப்பட்டி மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.